ஏழு கண் மதகில் புதிய 'ஷட்டர்' பொருத்தப்பட்டது

ஏழு கண் மதகில் புதிய ‘ஷட்டர்’ பொருத்தப்பட்டது.
ஏழு கண் மதகில் புதிய 'ஷட்டர்' பொருத்தப்பட்டது
Published on

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் பூவாய் மண்டபம் ஏழு கண் மதகின் முதல் 'ஷட்டர்' கடந்த 18-ந் தேதி கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக உடைந்தது. இதனால் கோடாலிகருப்பூர், அண்ணங்காரம்பேட்டை, கீழக்குடிகாடு ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களை வெள்ளநீர் சூழ்ந்தது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் சேதமடைந்திருந்த மதகை அப்புறப்படுத்தி, புதிய 'ஷட்டர்' பொருத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஆற்றின் வெள்ளநீர் குறையாமல் இருந்ததால் பழைய உடைந்த ஷட்டரை அகற்றும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் புதிய 'ஷட்டர்' தயாரிக்கப்பட்டு கோடாலி கருப்பூருக்கு கொண்டு வரப்பட்டது.

மேலும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததன் காரணமாக வடிகால் ஓடையின் உட்புகுந்த தண்ணீர் மீண்டும் ஆற்றுக்கு திரும்பத் தொடங்கியது. வெள்ளநீர் குறைந்ததும் உடைந்த 'ஷட்டர்' தெரிய தொடங்கியது. 4 நாட்கள் கடும் போராட்டத்திற்குப் பிறகு நேற்று மாலை பழைய 'ஷட்டர்' அகற்றப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் புதிய 'ஷட்டர்' பொருத்தும் பணியை பொறியாளர்கள் மேற்கொண்டனர். நேற்று மாலை மதகில் புதிய ஷட்டரை பொருத்தி, கொள்ளிடம் ஆற்றில் இருந்து பூவாய் மண்டபம் ஏழு கண் மதகு வழியாக வடிகால் ஓடைக்குள் தண்ணீர் புகுவதை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் இப்பகுதி விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com