வீட்டு முன் விளையாடிய ஒன்றரை வயது குழந்தை.. அருகில் இருந்த தண்ணீர் வாளி.. அடுத்து நடந்த அதிர்ச்சி

தாய் சமையல் வேலை செய்து கொண்டிருந்தநிலையில், அவரது 2 குழந்தைகளும் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தன.
வீட்டு முன் விளையாடிய ஒன்றரை வயது குழந்தை.. அருகில் இருந்த தண்ணீர் வாளி.. அடுத்து நடந்த அதிர்ச்சி
Published on

குளச்சல்,

குமரி மாவட்டம் குளச்சல் லியோன்நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜெனோ (வயது 32), மீன்பிடி தொழிலாளி. இவருடைய மனைவி டயானா. இவர்களுக்கு மூன்றரை வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் ரியானா என்ற பெண் குழந்தையும் இருந்தனர்.

ஆரோக்கிய ஜெனோ நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றார். வீட்டில் மனைவி டயானாவும் இரண்டு குழந்தைகளும் இருந்தனர். இந்தநிலையில் மாலையில் டயானா வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது 2 குழந்தைகளும் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தன. உற்சாகமிகுதியில் இருகுழந்தைகளும் சத்தம்போட்டபடி விளையாடின. இதனை சமையல் அறையில் நின்றபடி டயானா கேட்டு கொண்டிருந்தார்.

பின்னர் சிறிது நேரமாக சத்தம் கேட்கவில்லை. அத்துடன் குழந்தைகள் வீட்டிற்குள் வராததால் சந்தேகமடைந்த டயானா முன்பகுதியில் சென்று பார்த்தார். அப்போது குழந்தை ரியானா வீட்டின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வாளியில் தலைகீழாக விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் அருகே மூன்றரை வயது மகன் தனியாக விளையாடி கொண்டிருந்தான். வாளியில் விழுந்த குழந்தை தண்ணீரில் தலை மூழ்கிய நிலையில் அசைவற்று கிடந்தது.

உடனே அவர் பதறியடித்து கொண்டு குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் டயானா கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுதொடர்பாக குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com