பன்றிகளை வளர்க்க அனுமதி பெற வேண்டும்

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பன்றிகளை வளர்க்க உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பன்றிகளை வளர்க்க அனுமதி பெற வேண்டும்
Published on

சிவகாசி, 

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பன்றிகளை வளர்க்க உரிய அனுமதி பெற வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியல் தயாரிப்பு

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உரிய அனுமதியின்றி ஏராளமான பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எந்த பகுதியில் அதிக அளவில் பன்றிகள் வளர்க்கப்படுகிறது என்று மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து ஒரு பட்டியல் தயாரித்தனர்.

எச்சரிக்கை கடிதம்

அதில் திருத்தங்கல் பகுதியில் மட்டும் 18 பேர் உரிய அனுமதியின்றி பன்றிகள் வளர்த்தது தெரியவந்தது. இந்தநிலையில் குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் குடியிருப்பு பகுதியில் வளர்க்கப்படும் பன்றிகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டு வருகிறது.

அதில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகள் வருமாறு:-

பன்றிகளை குடியிருப்பு பகுதியில் இருந்து 1 கி.மீ.தூரத்திற்கு அப்பால் கொட்டில் அமைத்து வளர்க்க வேண்டும். கொட்டிலில் கொசு கொல்லி மருந்து அடிக்க வேண்டும். பன்றிகளை ஊருக்குள்ளும், பொது இடங்களிலும் விடக்கூடாது.

அனுமதி பெற வேண்டும்

பன்றிகளை வளர்க்க மாநகராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும். பன்றியின் கழிவுகளை அப்புறப்படுத்தி உரக்குழிக்குள் போட்டு மண்ணால் மூட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி அறிவித்துள்ள விதிமுறைகளை பன்றி வளர்ப்போர் பின்பிற்றவில்லை என்றால் 1939-ம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதாரச்சட்டத்தின் கீழ் பன்றி வளர்ப்போர் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com