திருமுல்லைவாயல் அருகே சாலையில் கவிழ்ந்த போலீஸ் ஜீப்; இன்ஸ்பெக்டர் காயம்

திருமுல்லைவாயல் அருகே சாலையில் போலீஸ் ஜீப் கவிழ்ந்தது. அப்போது ஜீப்பின் முன்பக்க கண்ணாடி உடைந்து இன்ஸ்பெக்டரின் தொண்டையில் குத்தியதில் காயம் அடைந்தார்.
திருமுல்லைவாயல் அருகே சாலையில் கவிழ்ந்த போலீஸ் ஜீப்; இன்ஸ்பெக்டர் காயம்
Published on

சென்னை மாதவரம் போக்குவரத்து போலீசில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மாரிமுத்து (வயது 53). இவர், ஆவடி அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே போக்குவரத்து பிரிவு போலீசில் சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் மகாவீரன் (33) என்பவர் போலீஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து இன்ஸ்பெக்டர் மாரிமுத்துவை ஆவடியில் உள்ள அவரது வீட்டில் விடுவதற்காக மகாவீரன், போலீஸ் ஜீப்பில் அழைத்துச்சென்றார்.

அதிகாலை 2.45 மணியளவில் திருமுல்லைவாயல் கல்லறை நிறுத்தம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே கிடந்த ஒரு மரக்கட்டை மீது போலீஸ் ஜீப் ஏறியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த போலீஸ் ஜீப் சாலையோரம் கவிழ்ந்தது.

இதில் ஜீப்பின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அப்போது ஜீப்பின் முன்பகுதியில் அமர்ந்து இருந்த இன்ஸ்பெக்டர் மாரிமுத்துவின் தொண்டையில், உடைந்த கண்ணாடி துண்டு குத்தியதில் அவர் காயம் அடைந்தார். மேலும் போலீஸ் டிரைவரான மகாவீரனுக்கு இடது தோள் பட்டையில் உள்காயம் ஏற்பட்டது. இருவரும் ஆவடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த விபத்து தொடர்பாக பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com