ஆவடி அருகே ரெயிலில் அடிபட்டு தனியார் நிறுவன மேலாளர் பலி

ஆவடி ரெயில் நிலையம் அருகே ரெயிலில் அடிபட்டு தனியார் நிறுவன மேலாளர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஆவடி அருகே ரெயிலில் அடிபட்டு தனியார் நிறுவன மேலாளர் பலி
Published on

ஆவடி,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த நொச்சிளி எகவமேட்டூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 45). இவர் மாதவரம் பகுதியில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட்டில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் இவர் தனது தங்கையை திருத்தணி பகுதியில் உள்ள கே.ஜி.கண்டிகை பகுதிக்கு அழைத்து சென்று அவரது வீட்டில் விட்டு விட்டு அப்படியே வேலைக்கு சென்று விடுவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அதன் பிறகு அன்று மாலை இவர் கே.ஜி.கண்டிகையில் இருந்து புறப்பட்டு வேலைக்கு செல்வதாக தங்கையிடம் கூறிவிட்டு சென்றார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு ஆவடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு மோகன் உயிரிழந்து கிடப்பதை அறிந்த ஆவடி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த மோகனுக்கு அருணா குமாரி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com