தஞ்சையில் 63 விநாயகர் சிலைகள் ஊர்வலம்

தஞ்சையில் 63 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வடவாற்றில் கரைக்கப்பட்டன.
தஞ்சையில் 63 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
Published on

தஞ்சாவூர்;

தஞ்சையில் 63 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வடவாற்றில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

தஞ்சை மாநகரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பா.ஜ.க., இந்து முன்னணி, இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 82 இடங்களில் வண்ண, வண்ண விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கடந்த 18-ந் தேதியும், நேற்றுமுன்தினமும் பல சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. 3-வது நாளான நேற்றுமாலை தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விஸ்வரூப விநாயகர் விழாக்குழு சார்பில் தனித்தனி வாகனங்களில் ஊர்வலமாக தஞ்சை ரெயிலடிக்கு எடுத்து வரப்பட்டன.பின்னர் விழாக்குழு ஒருங்கிணைப்பாளர் விநாயகம் தலைமையில் பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.ராமலிங்கம், தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் ஆகியோர் முன்னிலையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலத்தை பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதேபோல் இந்து முன்னணி சார்பில் நடந்த 20 விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை மாவட்ட செயலாளர் குபேந்திரன் தலைமையில் கோட்ட செயலாளர் மோகனசுந்தரம், மாவட்ட அமைப்பாளர் ஈசானசிவம் ஆகியோர் முன்னிலையில் வக்கீல் இளங்குமார் சம்பத் தொடங்கி வைத்தார்.

வடவாற்றில் கரைக்கப்பட்டன

இந்த விநாயகர் சிலைகள் எல்லாம் மேளதாளம், முழங்க காந்திஜிசாலை, பழைய பஸ் நிலையம், தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, கொடிமரத்துமூலை வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரந்தை வடவாற்றில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் பிரச்சினை ஏதும் நடைபெறாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தஞ்சை மாநகரில் ஆங்காங்கே தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் பலர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com