மயிலாடுதுறையில் ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறிய வெறிநாய்

சாலையில் நடந்து சென்றவர்கள், மோட்டார் சைக்கிளில் சென்ற 10-க்கும் மேற்பட்டோரை துரத்திச்சென்று வெறி நாய் கடித்தது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியான பஸ் நிலையம், கச்சேரி சாலை, கண்ணாரத்தெரு, அரசு ஆஸ்பத்திரி சாலை, கூறைநாடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை தெருநாய் ஒன்று வெறிபிடித்த நிலையில் சாலையில் சுற்றித்திரிந்தது. அந்த நாய், சாலையில் நடந்து சென்றவர்கள், மோட்டார் சைக்கிளில் சென்ற 10-க்கும் மேற்பட்டோரை துரத்திச்சென்று கடித்தது.
இதில் காலில் பலத்த காயமடைந்த நிலையில் ரத்தம் சொட்டச்சொட்ட அரசு ஆஸ்பத்திரி நோக்கி காயம் அடைந்தவர்கள் படையெடுத்தனர். இதில் சிவக்குமார்(வயது 42), தனுஸ்ரீ(17), கற்பகம்(62) உள்பட 20-க்கு மேற்பட்டோர் ஆஸ்பத்திரிக்கு வந்த நிலையில், அவர்களுக்கு நாய்க்கடி ஊசி செலுத்திய டாக்டர்கள், இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து காயம் அடைந்தவர்களை சந்தித்து விபரங்களை கேட்டறிந்தனர். பின்னர் வெறிபிடித்த நிலையில் சுற்றித்திரிந்த நாயை பிடிக்க நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.மயிலாடுதுறை நகரில் அதிகரித்துள்ள தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அவற்றுக்கு கருத்தடை செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






