

சென்னை,
புழல் சிறைக்குள்ளேயே பிரபல ரவுடியை கொலை செய்ய ரூ.1 கோடி பேரம் பேசப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் வெள்ளைக் காளி. இவர், கொலை வழக்கில் தண்டனை பெற்று, சென்னையை அடுத்த புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அதேபோல், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான லாலி மணிகண்டன் என்பவரும் கொலை வழக்கில் தண்டனை பெற்று அதே புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வெள்ளைக்காளிக்கும், லாலி மணிகண்ட னுக்கும் ஏற்கனவே முன்பகை இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக புழல் சிறைக்குள்ளேயே ரவுடி வெள்ளைக்காளியை தீர்த்துக்கட்ட லாலி மணிகண்டன் முடிவு செய்து, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதையடுத்து லாலி மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரிடமும் சிறை அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.
அப்போது, வெள்ளைக்காளியை கொலை செய்ய ரூ.1 கோடி வரை பேரம் பேசப்பட்டதும், அதற்காக முன்பணமாக ரூ.25 லட்சம் வழங்க திட்டமிடப்பட்டிருந்ததும் தெரியவந்தது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் சிறையில் உயர் அதிகாரிகள் பெரும்பாலும் இருக்க மாட்டார்கள் என்பதால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நேற்று வெள்ளைக்காளியை கொலை செய்ய திட்டமிட்டு இருந்ததும் அம்பலமானது.
இந்த தகவல் உறுதியானதை தொடர்ந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடி லாலி மணிகண்டன் சேலம் மத்திய சிறைக்கும், அவரது கூட்டாளிகளான தென்மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடிகள் 3 பேர் கடலூர் மத்திய சிறைக்கும் அவசர அவசரமாக மாற்றப்பட்டனர். புழல் சிறைக்குள்ளேயே பிரபல ரவுடியை கொலை செய்ய பயங்கர சதித்திட்டம் தீட்டப்பட்ட சம்பவம் சிறைத்துறை மற்றும் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.