

நெல்லை,
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் குறித்து விமர்சனம் செய்த அவர், சட்டமன்றத்தில் மதம் சார்ந்த சபாநாயகர், அமைச்சர்களை பார்க்கும் நிலை உருவாகி இருப்பதாக குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் கூறியதாவது;-
“பல இனங்களையும், மதங்களையும் சேர்ந்தவர்கள் சபாநாயகராக பணியாற்றிய காலமெல்லாம் போய், இன்றைக்கு ஒரு மதம் சார்ந்த சபாநாயகர், ஒரு மதம் சார்ந்த அமைச்சர்களை சட்டமன்றத்தில் பார்க்க முடிகிறது. இதை நயினார் நாகேந்திரன் சொன்னால் எல்லோரும் தவறாக பார்க்கிறார்கள். இதனை பொதுமக்களின் பார்வைக்கே நான் விட்டுவிடுகிறேன்.
சட்டமன்றத்தில் என்னெல்லாம் நடந்தது என்பதை இன்றைக்கு நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பலர் அதனை ரசிக்கிறார்கள், ஆதரவு தருகிறார்கள். ஆனால் அதே சமயம், நிறைய பேர் எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்கள்.
சட்டமன்றத்தில் பேசும்போதும் எம்.எல்.ஏ.க்கள் மாறி மாறி ஒருவர் குடும்பத்தைப் பற்றி ஒருவர் பேசுவதும், மாமாவிடம் போய் கேள், அப்பாவிடம் போய் கேள் என்று சொல்வதும், பைபிளில் உள்ள வசனங்களை சொல்வதும், இதெல்லாம் ஏற்புடையதா என்பதை நாட்டு மக்கள்தான் சிந்தித்து பார்க்க வேண்டும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.