பேருந்தில் இருந்து திடீரென உடைந்து விழுந்த படிக்கட்டு

படிக்கட்டில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பேருந்தில் இருந்து திடீரென உடைந்து விழுந்த படிக்கட்டு
Published on

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மதியம் அரசு டவுன் பேருந்து ஒன்று, முடங்கியாறு சாலையில் சென்று கொண்டு இருந்தது. தாசில்தார் அலுவலகம் அருகே சென்றபோது பேருந்தின் பின்புற படிக்கட்டு திடீரென உடைந்து சாலையில் விழுந்தது. அப்போது படிக்கட்டில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

உடனே பேருந்து நிறுத்தப்பட்டது. பின்னர் உடைந்த படிக்கட்டை பணிமனைக்கு எடுத்து சென்றனர். இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற பேருந்துகளால் அசம்பாவிதம் ஏற்படக்கூடும் என்றும், நல்ல நிலையில் உள்ள பேருந்துகளை மட்டுமே இயக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com