

சென்னை,
புரட்சிக்கவியும், சமூக சிந்தனையாளருமான பாவேந்தர் பாரதிதாசனின் 136-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை, மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் அமைந்துள்ள பாரதிதாசன் திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளையொட்டி தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவருமான கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ் உணர்வின் அடையாளமாக, திராவிட இயக்கத்தின் பெருந்தொண்டராக, பகுத்தறிவு மிக்க வரிகளால் தமிழ் மனத்தைத் தட்டி எழுப்பிய புரட்சிக்கவிஞராகத் திகழ்ந்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் இன்று. தமிழுக்கும் தமிழர்க்கும் அவர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றிடுவோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.