மனைவியை சேர்த்து வைக்க கோரி டிரான்ஸ்பார்மர் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி போலீஸ் நிலையம் முன்பு இருந்த டிரான்ஸ்பார்மர் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது மின் கம்பியை கடித்ததால் மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார்.
மனைவியை சேர்த்து வைக்க கோரி டிரான்ஸ்பார்மர் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
Published on

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள சின்னமாங்கோடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் தர்மதுரை (வயது 32). இவருடைய மனைவி ரோஜா. இவர், பூங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். குடும்ப பிரச்சினை காரணமாக ரோஜா, தற்போது கணவர் தர்மதுரையை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், மனைவி ரோஜாவை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு தர்மதுரை தொடர்ந்து பல முறை ஆரம்பாக்கம் போலீஸ் நிலையம் சென்று போலீசாரிடம் வலியுறுத்தி வந்ததாக தெரிகிறது.

அதேபோல நேற்றும் ஆரம்பாக்கம் போலீஸ் நிலையம் சென்ற தர்மதுரை, அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் மனைவியை தன்னுடன் சேர்ந்து வைக்குமாறு கூறினார்.

அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே போலீசார் அவரை சற்று உட்கார சொன்ன நிலையில், ஆத்திரமடைந்த தர்மதுரை போலீஸ் நிலையம் முன்பு உள்ள டிரான்ஸ்பார்மர் மீது எறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

இதனை கண்ட போலீசார் பதறி அடித்துக்கொண்டு போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேவந்து டிரான்ஸ்பார்மரில் ஏறி நின்ற தர்மதுரையை கீழே இறங்கும்படி வலியுறுத்தினர். ஆனால் அவர் கீழே இறங்காமல் டிரான்ஸ்பார்மர் மின் கம்பியை கடித்தார்.

இதில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். போலீசார் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com