ஊத்துக்கோட்டை அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு - நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்

ஊத்துக்கோட்டை அருகே நண்பர்களுடன் ஏரியில் குளித்த வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
ஊத்துக்கோட்டை அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு - நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்
Published on

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரண்டூர் காலனியை சேர்ந்தவர் குமார் ஏ.சி.மெக்கானிக். இவரது மகன் ராஜ்குமார் (வயது 23). இவர் கூலி வேலை செய்து வந்தார்.

ராஜ்குமார் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்களுடன் சேர்ந்து கிராம எல்லையில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றார். ஏரியில் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த ராஜ்குமார் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் அவரை தேடியும் கிடைக்கவில்லை. எனவே சம்பவம் குறித்து அவர்கள் ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் தேர்வாய்கண்டிகையில் உள்ள தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தீயணைப்பு வீரர்கள் அவரை ஏரியில் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று ராஜ்குமாரின் உடல் ஏரியில் மிதந்தது. உடனே போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் ஏரியில் குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்வம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com