ஆற்றுப்பாலத்தில் தூங்கிய வாலிபர் தவறி விழுந்து சாவு

வாய்மேடு அருகே ஆற்றுப்பாலத்தில் தூங்கிய வாலிபர் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
ஆற்றுப்பாலத்தில் தூங்கிய வாலிபர் தவறி விழுந்து சாவு
Published on

வாய்மேடு:

வாய்மேடு அருகே ஆற்றுப்பாலத்தில் தூங்கிய வாலிபர் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

ஆட்டோ டிரைவர்

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி கீழ் பாதியை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மகன் தினேஷ் (வயது23). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவு தினேஷ் வேலை முடிந்ததும், வீட்டுக்கு செல்லும் வழியில் மானங்கொண்டான் ஆற்றுப்பாலத்தில் நண்பர்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

நண்பர்கள் சென்ற பிறகு, தினேஷ் அந்த ஆற்றுப்பாலத்தின் பக்கவாட்டு சுவர் மீது தூங்கிவிட்டார். இந்த நிலையில் அவர் ஆற்றில் தவறி விழுந்தார். இதில் ஆற்றில் மூழ்கி தினேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

ஆற்றில் உடல் மீட்பு

நேற்று காலையில் அவருடைய குடும்பத்தினர் தேடியபோது தினேஷ் ஆற்றில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து வேதாரண்யம் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தினேஷின் உடல் மீட்கப்பட்டு, வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆற்றுப்பாலத்தில் தூங்கிய வாலிபர் ஆற்றில் தவறி விழுந்து இறந்தது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com