கொண்டித்தோப்பில் வாலிபரை கொன்று கூவம் ஆற்றில் உடல் வீச்சு

சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் வாலிபரை கொன்று கூவம் ஆற்றில் உடலை வீசிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொண்டித்தோப்பில் வாலிபரை கொன்று கூவம் ஆற்றில் உடல் வீச்சு
Published on

சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் கூவம் ஆற்றில் ஆண் பிணம் மிதந்தது. இதைகண்ட அந்த பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஏழுகிணறு போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கூவத்தில் மிதந்த உடலை மீட்டனர்.

பிணமாக கிடந்தவருக்கு சுமார் 20 முதல் 25 வயது இருக்கும். அவரது உடலில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டது. எனவே மர்மநபர்கள் அவரை வெட்டிக்கொலை செய்து விட்டு, உடலை கூவத்தில் வீசி இருப்பது தெரிந்தது. பின்னர் அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், கொலையானவர், தண்டையார்பேட்டை சிவாஜி நகரைச் சேர்ந்த சதீஷ் என்ற குண்டு சதீஷ் (வயது 24) என்பது தெரிந்தது. பிரபல ரவுடியான அவர் மீது வியாசர்பாடி, கொடுங்கையூர், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

ஆனால் தற்போது சதீஷ் திருந்தி வாழ்ந்ததுடன், குற்றச்சம்பவத்தில் ஈடுபடுவர்கள் குறித்து போலீசாருக்கு துப்பு கொடுத்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சதீசுக்கும், ஏழுகிணறு பகுதியை சேர்ந்த சில மர்ம நபர்களுக்கும் இடையே கஞ்சா விற்பதில் போட்டி இருந்ததாகவும் தெரிகிறது. இதனால் இருதரப்பினருக்கும் முன்விரோதமாக மாறியது.

இதற்கிடையில் எதிர்தரப்பை சேர்ந்த சில கஞ்சா வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர். அவர்கள் குறித்து போலீசாருக்கு சதீஷ்தான் தகவல் சொல்லி இருப்பார் என்று கருதிய மர்மநபர்கள், சதீசை வெட்டிக்கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் ஏழுகிணறு போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி தலைமையிலான தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

சதீசுக்கு ரவுடிகள் மற்றும் கஞ்சா வியாபாரிகளுடன் முன்விரோதம் இருப்பதால் அவர்களில் யாராவது இந்த கொலையை செய்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com