போலீசில் சிக்காமல் இருக்க பாலத்தில் இருந்து குதித்த வாலிபர் படுகாயம்

விருதுநகர் அருகே போலீசாரிடமிருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்த வாலிபர் படுகாயம் அடைந்தார். அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசில் சிக்காமல் இருக்க பாலத்தில் இருந்து குதித்த வாலிபர் படுகாயம்
Published on

விருதுநகர் அருகே போலீசாரிடமிருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்த வாலிபர் படுகாயம் அடைந்தார். அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரோந்து பணி

விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்காள ஈஸ்வரன் மற்றும் போலீசார் பட்டம்புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பாலத்தின் தடுப்புச்சுவரில் 3 பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

ரோந்து சென்ற போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக கூறியதாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் சோதனை நடத்தினர்.

பாலத்தில் இருந்து குதித்தார்

அப்போது ஒரு வாலிபரிடம் 10 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சூரியராஜ் (வயது 22) என்பதும், ஜே.சி.பி. டிரைவராக பணியாற்றுவதும் தெரியவந்தது. மேலும் அவருடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் அவரது உறவினர்கள் முருகராஜ், நாகராஜ் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து முருகராஜ், நாகராஜ் ஆகியோரை போலீசார் வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

சூரியராஜை விசாரணைக்கு போலீஸ் நிலையம் வருமாறு அழைத்தனர். அப்போது திடீரென சூரியராஜ் பாலத்தின் தடுப்பு சுவரில் இருந்து கீழே குதித்தார். இதனை சற்றும் எதிர்பாராத போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் உடனடியாக பாலத்திற்கு கீழே சென்று பார்த்தபோது அங்கு சூரியராஜ் படுகாயத்துடன் கிடந்தார்.

தீவிர சிகிச்சை

அவரை உடனடியாக சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்ச அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்ப ஏற்படுத்தியது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com