திடீரென தானாக நகர்ந்த லாரி.. தடுக்க சென்ற தொழிலாளி உடல் நசுங்கி பலி - அதிர்ச்சி வீடியோ

திடீரென தானாக நகர்ந்த லாரி.. தடுக்க சென்ற தொழிலாளி உடல் நசுங்கி பலி - அதிர்ச்சி வீடியோ

லாரியை அதன் டிரைவர் என்ஜினை ‘ஆப்’ செய்யாமலேயே கீழே இறங்கி விட்டதாக கூறப்படுகிறது.
Published on

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த தச்சூர் மோட்டு குடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 65). இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு ஆனந்தி, ஜெயலட்சுமி, தனலட்சுமி என்ற 3 மகள்கள் உள்ளனர். சிவலிங்கம் ஆரணி- தேவிகாபுரம் நெடுஞ்சாலையில் உள்ள அட்டைப்பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வந்தார்.

நேற்று காலை குடோனுக்கு 2 லாரிகளில் வந்த அட்டைப்பெட்டிகளை தொழிலாளர்கள் இறக்கிக் கொண்டு இருந்தனர். அப்போது பக்கவாட்டில் நின்ற லாரியை அதன் டிரைவர் என்ஜினை ஆப் செய்யாமலேயே கீழே இறங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த லாரி திடீரென தானாக முன்னோக்கி நகர்ந்ததை கவனித்த சிவலிங்கம், சபீர் உள்பட 3 தொழிலாளர்களும் கைகளால் நிறுத்த முயன்றனர். இதில் சிவலிங்கம் தனது முழு பலத்தையும் உபயோகப்படுத்தி லாரியின் முன்னால் 2 கைகளால் தடுத்துக்கொண்டே நிறுத்த போராடினார். ஆனால் அந்த லாரி நகர்ந்து கொண்டே வந்தது.

இந்த நிலையில் அந்த லாரியானது சிவலிங்கத்துடன் பின்னால் நின்ற லாரியில் வந்து மோதியபோது 2 லாரிகள் இடையே சிக்கி அவர் உடல் நசுங்கி பலியானார். சபீர் உள்பட 2 தொழிலாளர்களும் பக்கவாட்டில் நின்று தடுத்த நிலையில் ஒதுங்கிக்கொண்டதால் அவர்கள் உயிர்தப்பினர். இந்த சம்பவத்தில் லாரி என்ஜினை ஆப் செய்யாமல் தானாக நகர்ந்து வந்து தொழிலாளி உயிரிழப்புக்கு காரணமான லாரி டிரைவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com