"ஆபாசமாக வர்ணித்தார்" ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மீது பெண் பரபரப்பு புகார்

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
"ஆபாசமாக வர்ணித்தார்" ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மீது பெண் பரபரப்பு புகார்
Published on

சென்னை:

காஞ்சீபுரம் மாவட்டம், ஏகாட்டூரைச் சேர்ந்தவர் காயத்ரி தேவி. இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி தொகுதி எம்.பி.யுமான ரவீந்திரநாத் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்க வந்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்கள் குடும்பத்தினரும், ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினரும் நண்பர்களாக பழகி வந்தோம். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தின் மனைவி ஆனந்தி எனக்கு தோழி. என் குடும்ப பிரச்சினை காரணமாக எனது கணவரை கடந்த ஆண்டு விவாகரத்து செய்து விட்டேன். ரவீந்திரநாத்தை அண்ணனாக பாவித்து வருகிறேன்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி அதிகாலை 1 மணியளவில் ரவீந்திரநாத் அவரது செல்போன் வாட்ஸ்அப் கால் மூலம் என்னை அழைத்தார். நானும் அண்ணன் என்ற முறையில் பேசினேன். ஒரு கட்டத்துக்கு பிறகு தவறான கண்ணோட்டத்தில் பேசத்தொடங்கினார். என்னை ஆபாசமாக வர்ணித்த அவர், ஆசைக்கு இணங்க வற்புறுத்தினார். நான் மறுத்ததால் மிரட்டினார்.

இதையடுத்து நான் செல்போன் இணைப்பை துண்டித்து விட்டேன். இருப்பினும் தொடர்ந்து செல்போனில் அழைத்துக்கொண்டே இருந்தார்.

ரவீந்திரநாத் பாலியல் ரீதியாக தனது ஆசைக்கு இணங்கும்படி துன்புறுத்தியும் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தும் வந்தார். இது தொடர்பாக புகார் கொடுக்க வந்தேன். ஆனால், நாளைக்கு (இன்று) வரும்படி கூறி உள்ளனர். மீண்டும் வந்து புகார் கொடுப்பேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com