மறைமலைநகர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

மறைமலைநகர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மறைமலைநகர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கீழக்கரணை முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவரது மனைவி பொன்னரசி (வயது 26), இவர்கள் இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. சிரஞ்சீவிக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பது தெரிய வந்ததையடுத்து கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த பொன்னரசி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரிடம் கோபித்து கொண்டு கூடுவாஞ்சேரி அடுத்த பாண்டூர் அய்யனாரப்பன் தெருவில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் அங்கேயே தங்கி விட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென பொன்னரசி பூச்சி மருந்து குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன்னரசி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் பொன்னரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 15 மாதங்களே ஆவதால் இது குறித்து தாம்பரம் வருவாய் ஆர்.டி.ஓ.வும் விசாரித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com