திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலியிடம் ரூ.5 லட்சம் மோசடி; வாலிபர் கைது

துரைராஜும் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்த இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சிறு தொண்டமாதேவி பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 27). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அப்போது இவரும் அதே நிறுவனத்தி்ல் வேலை பார்த்து வந்த திண்டிவனம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.
இருவரும் சுமார் 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த இளம் பெண்ணிடம் இருந்து சிறுக, சிறுக துரைராஜ் பணம் வாங்கி உள்ளார். மொத்தம் ரூ.5 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் துரைராஜ் அந்த பெண்ணிடம் பேசுவதை திடீரென தவிர்த்ததாக தெரிகிறது. மேலும் அவரை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததோடு, வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கேட்டபோது அந்த இளம்பெண்ணை துரைராஜ் திட்டியதாக தெரிகிறது. இது குறித்து அந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிந்து துரைராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






