தூத்துக்குடியில் ஸ்ட்ரெச்சரில் அமர்ந்தபடியே குரூப்-2 தேர்வு எழுதிய வாலிபர்

தூத்துக்குடியில் சாலை விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்ட வாலிபர், ஸ்ட்ரெச்சரில் அமர்ந்தபடியே டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு எழுதினார்.
தூத்துக்குடியில் ஸ்ட்ரெச்சரில் அமர்ந்தபடியே குரூப்-2 தேர்வு எழுதிய வாலிபர்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் சாலை விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்ட வாலிபர், ஸ்ட்ரெச்சரில் அமர்ந்தபடியே டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 தேர்வு எழுதினார்.

லாரி மோதியது

தமிழகம் முழுவதும் அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் நடத்தப்படும் குரூப்-2 மற்றும் குரூப் 2ஏ-ல் உள்ள பணிகளுக்கான எழுத்துத்தேர்வு நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடந்தது.

தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தூத்துக்குடி துறைமுகம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது இவர் மீது லாரி மோதியதில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு, தூத்துக்குடி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஸ்ட்ரெச்சரில் அமர்ந்து தேர்வு எழுதினார்

இதற்கிடையே அவர், டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தார். இந்த தேர்வை எழுதுவதற்காக அவர் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் போல்பேட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்திற்கு வந்தார்.

ஆம்புலன்சில் இருந்து அவரை ஸ்ட்ரெச்சர் மூலம் தேர்வு அறைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு ஸ்ட்ரெச்சரில் அமர்ந்து தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

பின்னர் பாலசுப்பிரமணியன் ஸ்ட்ரெச்சரில் அமர்ந்தபடியே குரூப்-2 தேர்வை எழுதினார். விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டும் விடாமுயற்சியுடன் ஆம்புலன்சில் வந்து ஸ்ட்ரெச்சரில் அமர்ந்தபடி தேர்வு எழுதிய அவரை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com