மக்களின் உடல்நலனுடன் விளையாடும் ஆவின் நிர்வாகம் - நயினார் நாகேந்திரன் கண்டனம்

தூய்மையான ஆவின் பால் விநியோகத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என நயினார் நகேந்திரன் தெரிவித்தார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

மக்களின் உடல்நலனுடன் விளையாடும் ஆவின் நிர்வாகம் - முறைகேடுகளை கண்டறிய உயர்மட்டக் குழு அமைத்திட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கலப்படம்

தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் தொடர்பாக பொதுமக்களும் பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஒருபுறம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக், குளோரின் மற்றும் மருந்து நெடி வீசுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டும் நிலையில், மறுபுறம் கடலூர் சேத்தியாதோப்பில் பாலில் மரவள்ளிக்கிழங்கு மாவு, அகர் அகர் போன்ற ரசாயனங்களை கலந்து கலப்படம் செய்வதாக பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பால் கொள்முதல்

மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இத்தகைய ரசாயன கலப்படங்களை அனுமதிப்பதும், முறைகேடுகளை தட்டிக்கேட்பவர்களை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துவதும் தற்போதைய தவெக அரசின் நிர்வாக சீர்கேட்டை படம்பிடித்துக்காட்டுகிறது. மேலும், முறையான தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் ஏதுமின்றி, தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் பாலை கொள்முதல் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

உயர்மட்ட குழு

எனவே, பாலில் வரும் ரசாயன நெடி மற்றும் சேத்தியாதோப்பு மாவுக்கலப்பட முறைகேடு ஆகிய இரண்டு விவகாரங்கள் குறித்தும் உடனடியாக உயர்மட்ட குழு அமைத்து அரசு விசாரணை நடத்த வேண்டும். மக்களின் உடல்நலத்தோடு விளையாடும் ஆவின் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, தூய்மையான ஆவின் பால் விநியோகத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com