

தஞ்சை,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சுகுமார் (48). இவரது மனைவி அன்புச்செல்வி (45). இவர்களுக்கு அஸ்வந்த் (2) என்ற மகன் உள்ளார். சம்பவத்தன்று சுகுமார் தனது மனைவி மற்றும் மகனை பைக்கில் அழைத்து தனது தாயார் ஜானகியை பார்க்க பவுண்டரீகபுரம் சென்றார். பின்னர் அங்கிருந்து திருநாகேஸ்வரத்திற்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.
ஆண்டலாம்பேட்டை அருகே வந்தபோது, காரைக்காலில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக பைக்கின் பின்புறம் மோதியது. இதில் பைக்கில் இருந்து கீழே விழுந்த அன்புச்செல்விக்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், சுகுமார் மற்றும் 2 வயது குழந்தை அஸ்வந்த் ஆகியோர் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருநீலக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உயிரிழந்த அன்புச்செல்வியின் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
விபத்துக்கு காரணமான அரசு பஸ் டிரைவர், கும்பகோணம் அருகே மருதநல்லூர் சீனிவாசபுரத்தை சேர்ந்த சீனிவாசன் (33) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.