

கோவை,
கோவை நவஇந்தியா அருகே உள்ள பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அடுத்தடுத்து சுமார் 20 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்ட தகர வீடுகள் உடைந்து சேதமடைந்தன.
சம்பவம் நடைபெற்றபோது அப்பகுதியில் வசித்து வந்த வடமாநில தொழிலாளர்கள் பணிக்கு சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும், தொழிலாளர்களின் வீடுகளில் இருந்த உடமைகள் மற்றும் பொருட்கள் தீயில் சிக்கி சேதமடைந்தன.
தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த சிலிண்டர்களில் இருந்து எரிவாயு வெளியேறி, அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து வெடிப்பு சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் 30-க்கும் மேற்பட்ட வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு கொழுந்துவிட்டு எரிந்த தீயை நீண்ட நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும், தீப்பற்றாமல் இருந்த சிலிண்டர்களை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி மீட்டனர். இதன் மூலம் மேலும் விபத்து ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்களின் உடமைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. 50-க்கும் மேற்பட்ட தகர வீடுகள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
20-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததுடன், ஆபத்தான நிலையில் இருந்த சிலிண்டர்களையும் பாதுகாப்பாக மீட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.