மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி 2 மாணவர்கள் பலி-உவரி அருகே சோகம்

உவரியிலிருந்து பெரியதாழை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, கூட்டப்பனை அருகே முன்னால் சென்ற வாகனத்தை இருவரும் முந்திச் செல்ல முயன்றுள்ளனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் இடிந்தகரை அருகே உள்ள பெரியதாழை சுனாமி காலனியைச் சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் யோசுவா (வயது 21). இவரது நண்பர் அதே பகுதி ஜார்ஜியார் நகரைச் சேர்ந்த சாலமோன் (20). இவர்கள் இருவரும் ஐ.டி.ஐ.யில் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு இருவரும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் உவரிக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். உவரியிலிருந்து பெரியதாழை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, கூட்டப்பனை அருகே முன்னால் சென்ற வாகனத்தை இருவரும் முந்திச் செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது எதிரே வந்த வேன் எதிர்பாராத விதமாக வாலிபர்கள் இருவரும் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட அந்த வழியாக சென்றவர்கள், அவர்களை மீட்டு ஆம்புலன்சில் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இந்த விபத்து தொடர்பாக உவரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






