

கள்ளக்குறிச்சி,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள தாராபுரத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்கு மதுரை மாவட்டம் பேரையூர் அருகே தெய்வநாயகபுரத்தை சேர்ந்த சங்கரேஸ்வரன் என்பவர் ஒப்பந்ததாரராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மின்கோபுரம் அமைக்கும் பணிக்கு வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்த முடிவு செய்தார்.
அதன்படி காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள உத்திரமேரூரில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் 13 பேரை வேலைக்கு அழைத்தார். அவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் ஒரு மினி லாரியில் தாராபுரத்துக்கு புறப்பட்டனர். மினிலாரியை தெய்வநாயகபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 32) என்பவர் ஓட்டிச் சென்றார்.
நேற்று அதிகாலை 3 மணியளவில் கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் மினிலாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கோவையில் இருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்தது. கள்ளக்குறிச்சியில் உள்ள ஏமப்பேர் புறவழிச்சாலையில் சென்ற போது ஆம்னி பஸ்சும், மினிலாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.
இந்த கோர விபத்தில் மினிலாரி அப்பளம் போல் நொறுங்கி, உருக்குலைந்தது. மேலும் ஆம்னி பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இதில் மினிலாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளர்கள் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அபயக்குரல் எழுப்பினர்.
இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆம்னி பஸ் டிரைவர் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே மாயன்குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன்(56), மினிலாரி டிரைவர் மணிகண்டன் மற்றும் மினிலாரியில் வந்த வடமாநில தொழிலாளிகளான முகேந்தர்முனியா(35), தருர்ரஜாத்(30), அனோஜ்குமார்(20), சம்மன்ரஜாத்(28), ராஜ்துனியா(30), சோட்டுகுமார்(23), அனோஜ்முனியா(35) ஆகிய 9 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகி பிணமாக கிடப்பது தெரியவந்தது. அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.