

விருதுநகர்,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கே.மேட்டுப்பட்டியில் சரவணன் என்பவரது விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக பட்டாசுக்கு தேவையான கருந்திரி தயாரிக்கும் பணி நடந்துள்ளது. இந்த பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கருந்திரி தயாரிப்பு பணியின்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ஏற்பட்ட விபத்தில், 2 வடமாநில தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.