பாப்பிரெட்டிப்பட்டி அருகேமோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி பெண் சாவுகணவர் படுகாயம்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் பெண் பலியானார். கணவர் படுகாயம் அடைந்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகேமோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி பெண் சாவுகணவர் படுகாயம்
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் பெண் பலியானார். கணவர் படுகாயம் அடைந்தார்.

விவசாயி

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மாரியம்பட்டி செங்காட்டு புதூரை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 65). விவசாயி. இவருடைய மனைவி தீர்த்தம்மாள் (55). இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் செங்காட்டு புதூரில் இருந்து கல்லாத்துக்காட்டு கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர். மோட்டார் சைக்கிளை சிவராஜ் ஓட்டினார். தீர்த்தம்மாள் பின்னால் அமர்ந்திருந்தார்.

அப்போது சேலம்- அரூர் மெயின் ரோட்டில் உள்ள அதிகாரப்பட்டி பிரிவு ரோடு அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளை இடதுபுறம் நிறுத்தியவாறு நின்றனர். அந்தசமயம் சேலத்தில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற தனியார் பஸ் வேகமாக வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தீர்த்தம்மாள் தனது கணவர் கண் எதிரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிவராஜிக்கு இடது கை எலும்பில் முறிவு ஏற்பட்டது.

டிரைவர் கைது

இதையடுத்து அங்கிருந்தவர்கள் சிவராஜை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஏ.பள்ளிப்பட்டி போலீசார் தீர்த்தம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து சிவராஜ் மகன் பார்த்திபன் கொடுத்த புகாரின்பேரில் ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கெய்க்வாட் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தியதாக தனியார் பஸ் டிரைவரான நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைகிணறு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (39) என்பவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com