பைக் மீது வாகனம் மோதி விபத்து: இளம்பெண் பலி; கணவர், குழந்தை படுகாயம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
விபத்து, இளம்பெண் பலி.
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி - சாத்தூர் சாலையில் பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில், இளம்பெண் உயிரிழந்தார். அவரது கணவர் மற்றும் ஒரு வயது குழந்தை படுகாயம் அடைந்தனர்.

தனியார் நிறுவன தொழிலாளி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வேலாயுதபுரத்தைச் சேர்ந்த சிவசங்கர் (வயது 30), கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். இவரது மனைவி சுபிக்சா(27). இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது.

பைக்கில் பயணம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. இதையடுத்து குழந்தையைச் சமாதானப்படுத்துவதற்காக சிவசங்கர், மனைவியையும் குழந்தையையும் தனது பைக்கில் ஏற்றிக்கொண்டு கோவில்பட்டி-சாத்தூர் சாலையில் சென்றுள்ளார்.

அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து

தனியார் கல்லூரி அருகே சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, கண் இமைக்கும் நேரத்தில் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்றது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சிவசங்கர், சுபிக்சா மற்றும் குழந்தை ஆகிய 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.

அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், ஆபத்தான நிலையில் இருந்த சுபிக்சா மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இளம்பெண் உயிரிழப்பு

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com