மாநிலம் முழுவதும் இதுவரை 2,915 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெற விண்ணப்பம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தகவல்

மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 915 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெற விண்ணப்பித்து இருப்பதாக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் இதுவரை 2,915 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் பெற விண்ணப்பம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தகவல்
Published on

சென்னை,

இதுதொடர்பாக தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மெட்ரிகுலேசன் பள்ளிகளின் அங்கீகாரம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படுகிறது. தொடர் அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்கும் பணி இணைய வழியாக மேற்கொள்ள ஆணையிடப்பட்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 915 தனியார் பள்ளிகள் அங்கீகாரத்தை பெற இணைய வழியாக விண்ணப்பித்துள்ளனர்.

இதில் 1,621 மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளிக்கான விண்ணப்பங்கள் மாவட்ட கல்வி அலுவலகத்திலும், 205 முதன்மை கல்வி அலுவலகத்திலும் பெறப்பட்டு இருக்கின்றன.

மாவட்ட கல்வி அலுவலர்கள் இணைய வழியாக விண்ணப்பிக்கப்பட்ட பள்ளிகளுக்கு ஜூன் மாதம் பள்ளிகள் திறந்த உடன் நேரில் சென்று கள ஆய்வு செய்து, நடைமுறையில் உள்ள விதிகளை பின்பற்றி அங்கீகாரம் புதுப்பித்தலுக்கு தேவையான அசல் ஆவணங்களையும், சரிபார்ப்பு பட்டியலின் படியும் சரிபார்த்து அறிக்கையினை இரு நகல்களாக எடுக்க வேண்டும்.

அதில் ஒன்றை முதன்மை கல்வி அலுவலகத்துக்கு பரிந்துரை செய்தும், மற்றொரு நகலை கோப்பில் பராமரிக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர் பரிந்துரைத்த பள்ளியின் அங்கீகாரத்தினை புதுப்பிக்க பள்ளியின் சான்றுகள் மற்றும் கள ஆய்வு குறிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடைமுறை விதிகளின்படி அங்கீகாரத்தினை புதுப்பித்து ஆணை வழங்கலாம் அல்லது குறைகள் இருந்தால் அதனை சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்து அனுப்ப கோரலாம்.

அரசாணையின்படி, உரிய அமைப்பிடம் இருந்து பள்ளி கட்டிட அனுமதி பெறாத பள்ளிகளின் தற்காலிக தொடர் அங்கீகாரம் 31.5.2020 வரை நீட்டித்து வழங்க அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இணைய வழியாக அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கப்பட்ட பள்ளிகளுக்கு 31.5.2020 முடிய தொடர் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் மற்றும் உரிய ஒப்புதல் பெறப்பட்டு இருப்பின் உறுதி, உரிம சான்றுகளில் குறிப்பிட்டுள்ள 3 ஆண்டுகள் காலத்துக்கு ஏற்ப அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

பெரும்பான்மையான பள்ளிகளுக்கு வருகிற 31-ந்தேதியுடன் (நாளை மறுதினம்) அங்கீகாரம் முடிவடைய உள்ளதால், தனிக்கவனம் செலுத்தி இணைய வழியாக விண்ணப்பிக்க அனைத்து மெட்ரிகுலேசன் மற்றும் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது.

அவ்வாறு விண்ணப்பிக்கும் பள்ளிகளுக்கு உடனுக்குடன் அங்கீகாரம் வழங்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஜூன் மாதம் இறுதிக்குள் இந்த பணிகள் முடிக்கப்பட வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன் படி அங்கீகாரம் பெற்ற பள்ளிகளாக செயல்படுவதை முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com