அரசு நிலத்தில் அனுமதியின்றி மணல் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன்

விவசாயிகளை விசாரணைக்கு அழைத்ததோடு அதிகளவிலான அபராதத்தையும் விதித்திருப்பதாக அதிமுக கொறடா எஸ் பி வேலுமணி கூறினார்.
அரசு நிலத்தில் அனுமதியின்றி மணல் எடுத்தவர்கள் மீது நடவடிக்கை; அமைச்சர் துரைமுருகன்
Published on

தமிழக சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய அதிமுக கொறடா எஸ் பி வேலுமணி, கோவையில் பட்டா நிலம் மற்றும் அரசு நிலங்களில் அனுமதியின்றி மணல் எடுப்பது தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு கனிமவள கடத்தலில் ஈடுபட்டவர்களை விட்டுவிட்டு சிறு விவசாயிகளை விசாரணைக்கு அழைத்ததோடு அதிகளவிலான அபராதத்தையும் விதித்திருப்பதாக கூறினார்.

தன் சொந்த நிலத்தில் மேடு பள்ளங்களை சரி செய்ய மண் வெட்டி எடுத்த விவசாயிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

அதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கோவையில் 16 வழித்தடங்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் செங்கல் சூளைகளை மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அரசு அனுமதியின்றி மணல் எடுப்போர் விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என கூறினார்.

விசாரணையில் கோவையில் போரூர், இக்கறை, ஆலந்தூர், வெள்ளிமலை என பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு நிலங்களில் 4 மீட்டர் முதல் 5 மீட்டர் வரை மணல் வெட்டி எடுக்கப்பட்டிருப்பதும், செங்கல் சூளைகளில் அதிகளவில் மணல் எடுக்கப்பட்டிருப்பதும் தெரியவந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன் அடிப்படையில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கனிமவளத்துறைக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் துரைமுருகன் தெரிவித்தார்.

எனவே, விவசாய நிலங்களை சமன் செய்வதற்காக கிராவல் மண் எடுத்ததாக கூறுவது ஏற்புடையது அல்ல எனவும் அரசு நிலத்தில் கள்ளத்தனமாக கனிமங்களை வெட்டி எடுத்தவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் துரைமுருகன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com