குட்கா ஊழல் வழக்கில் நடவடிக்கை : அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை

குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
குட்கா ஊழல் வழக்கில் நடவடிக்கை : அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை
Published on

சென்னை,

தமிழகத்தில் தடையை மீறி குட்கா தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதால், சென்னை செங்குன்றத்தில் செயல்பட்டு வந்த ஒரு குட்கா தயாரிப்பு ஆலையில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மாதவராவின் ரகசிய டைரி அதிகாரிகள் கையில் சிக்கியது.

அந்த டைரியில், தமிழகத்தில் தடையை மீறி குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்கு யார்-யாருக்கு எவ்வளவு லஞ்ச பணம் கொடுக்கப்பட்டது? என்ற விவரம் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், அப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், கலால் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பெயர்களும் லஞ்ச பட்டியலில் இடம் பெற்று இருந்தது.

குட்கா விற்பனைக்காக அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு மாதா மாதம் லஞ்சம் கொடுக்கப்பட்டதும், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. மொத்தம் ரூ.40 கோடி லஞ்சமாக வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தனர். அதன்படி கடந்த வாரம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் மாதவராவ் ஆஜராகினார். அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் குட்கா விற்பனைக்காக யார்-யாருக்கு? எவ்வளவு லஞ்ச பணம் கொடுக்கப்பட்டது? என்பன போன்ற விவரங்களை தெரிவித்தார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 5 அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com