தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவு மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: வெளியுறவு மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்
Published on

சென்னை,

தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. மீனவர்களின் கைது நடவடிக்கைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழலில் காரைக்காலில் இருந்து 2 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 13 பேரை கைது செய்தனர். மேலும் மீனவர்களின் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது;

இந்திய மீனவர்களும் அவர்களது குடும்பத்தினரும் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்படும்போது, உடனடியாகத் தலையிட்டதற்கு உங்கள் தூதரக தலையீட்டிற்க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நமது மீனவ சமூகத்தின் நலனுக்கான நமது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் அர்ப்பணிப்புக்கு இந்த உடனடி தலையீடு ஒரு சான்றாகும். சர்வதேச நீர்நிலைகளில் மீன்பிடித்ததற்காக 27-01-2025 அன்று இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களின் மீன்பிடி படகு பறிமுதல் செய்யப்பட்டதை உங்கள் அலுவலகத்தின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

தமிழ்நாட்டின் புதுச்சேரி மற்றும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த, சொற்ப வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மீனவர்கள், IND-PY-PK-MM-1722 என்ற பதிவு எண்ணைக் கொண்ட அவர்களின் மீன்பிடி படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மிகவும் துயரத்தில் உள்ள மீனவர்களின் குடும்பங்கள், அவர்களை விரைவில் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் மீனவர்களையே முழுமையாக நம்பியுள்ளது, அவர்கள் தங்கள் குடும்பங்களின் ஒரே வருமானம் ஈட்டும் மீனவர்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், மீனவர்களை விரைவில் இந்தியாவுக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்."இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com