சென்னையில் பயன்பாட்டில் இல்லாத 11 பள்ளி கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை

சென்னையில் இதுவரை ஆய்வு செய்யப்பட்ட 675 பள்ளிகளில், 11 பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதனை உடனடியாக இடிக்க உத்தரவிட்டு இருப்பதாகவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
சென்னையில் பயன்பாட்டில் இல்லாத 11 பள்ளி கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை
Published on

சென்னை,

நெல்லையில் அரசு உதவி பெறும் சாப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் மாணவர்கள் 3 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆராய கல்வித்துறை உத்தரவிட்டது.

அதன்படி, ஒவ்வொரு மாவட்டங்களிலும் முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சென்னையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தலைமையில் 48 குழுக்கள் அமைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை முதல் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று சென்னை அடையாறு ஊரூர் பகுதியில் அமைந்துள்ள அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி உள்பட பல பள்ளிகளில் முதன்மை கல்வி அலுவலர் உள்பட குழுக்கள் ஆய்வு நடத்தினர். அப்போது எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகவேல் உள்பட கல்வித்துறை சார்ந்த ஆசிரியர்கள், அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்கள்

அடையாறு அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறத்தில் அண்ணா முதல்-அமைச்சராக இருந்த போது கட்டி தொடங்கப்பட்ட சத்துணவு கூடம் பயன்பாட்டில் இல்லாமல் பாழடைந்து, அதன் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதேபோல், பயன்பாட்டில் இல்லாத கழிவறையும் அங்கு இருப்பது கண்டறியப்பட்டது. இதை பார்வையிட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் அதனை உடனடியாக இடிக்க உத்தரவிட்டார். அதன்படி, பொதுப்பணித்துறையினர் இன்று (புதன்கிழமை) அதனை இடிக்க இருக்கின்றனர்.

சென்னையை பொறுத்தவரையில் மொத்தம் 1,447 அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில் இதுவரை 675 பள்ளிகளில் முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து முடித்து இருக்கின்றனர். இதில் 11 பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்கள் இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாகவும், அவற்றை உடனடியாக இடிக்க உத்தரவிட்டு இருப்பதாகவும் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார். நாளைக்குள் (வியாழக்கிழமை) அனைத்து பள்ளிகளிலும் ஆய்வை முடித்து, அதுதொடர்பான அறிக்கையை அரசிடம் கொடுக்க இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com