

சென்னை,
தமிழக சட்டபேரவையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று தொடங்கியது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் வேளாண் பட்டப்படிப்பு படித்து முடித்துள்ள இளைஞர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும் சோளிங்கர் தொகுதி, கொடைக்கல் கிராமத்தில் 94 லட்சம் மதிப்பில் துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த 10 மாத காலத்தில் 27 லட்சம் மெட்ரிக் டன் வேளாண் விளை பொருட்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டதாக கூறிய அவர், தேவைக்கேற்ப ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் உருவாக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.