

சென்னை,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் நடிகர் முத்துக்காளை. இவர், சினிமா மீது உள்ள காதலால் இளம் வயதிலேயே சென்னைக்கு வந்துவிட்டார். 18 வயதில் கராத்தே-வில் பிளாக்-பெல்ட் வாங்கிய இவர், சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக தனது பணியை தொடங்கினார். இதனால், கல்வியைத் தொடர முடியாமல் போனது. பின்னர், நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இருந்த போதும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி கிடந்தார். இதையடுத்து, குடிப்பழக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த முத்துக்காளை, கல்வியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு படிக்க ஆரம்பித்தார்.
தனது விடா முயற்சியால், அண்மையில் தான் இளங்கலை தமிழ் இலக்கியத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதித்தார். ஏற்கனவே, முத்துக்காளை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2017 ஆம் ஆண்டு இளங்கலை வரலாறும், 2019 ஆம் ஆண்டு தமிழில் முதுகலை பட்டமும் பெற்றார். தனது விடா முயற்சியால் 58 ஆவது வயதில் மூன்றாவது பட்டம் வாங்கி சமீபத்தில் பலருக்கும் முன் உதாரணமாக திகழ்ந்த செய்தி வெளியானது. மதுப் பழக்கத்திற்கு அடிமையானாலும் அதில் இருந்து மீண்டு வந்து சாதிக்க வேண்டும் என்ற தனது எண்ணத்திற்கு கல்வியே அடித்தளமாக மாற்றிய முத்துக்காளைக்கு அண்மைகாலமாக சினிமாவில் பெரிய வாய்ப்புகள் வரவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான், தற்போது தனது மனைவியைக் காப்பாற்ற வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள முத்துக்காளை அதில், "என் மனைவி பெயர் மாலதி. வயது 47 ஆகும் அவருக்கு தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக ஒரு ஆபரேஷனுக்காக சென்னை கீழ்ப்பாக்கம் கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆபரேஷன் முடிந்து 17 நாள் ஆகிவிட்டது.
எனினும், ஆபரேஷன் செய்ததில் ஏற்பட்ட நுரையீரல் தொற்று உட்பட சிறிய சிறிய தொற்றுகள் காரணமாக என் மனைவி மூச்சுவிடுவதில் சிரமப்படுகிறார். அதனால் இந்த நேரத்தில் தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் சார், எனது மனைவியின் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து எனது மனைவியின் உயிரை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். கிட்டத்தட்ட ஒரு 17 நாளாக தனி மனிதனாக போராடுகிறேன். இந்த நேரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் சார் எனக்கு உதவி செய்தால் என்றென்றைக்கும் நன்றியோடு இருப்பேன்" என்று உருக்கமாக பேசியிருக்கிறார். இது முதல்-அமைச்சர் விஜயின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.