துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவிக்க தூத்துக்குடி புறப்பட்டார் ரஜினிகாந்த்

துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு புறப்பட்டார்.
துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவிக்க தூத்துக்குடி புறப்பட்டார் ரஜினிகாந்த்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்தது. ஆனால் ஆலையின் கழிவுகளால் பாதிப்புகள் ஏற்படுகின்றன என பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஆலை விரிவாக்க பணிகள் சமீபத்தில் நடந்தன.

இதனை தொடர்ந்து ஆலையை சுற்றியிருந்த பல்வேறு கிராம மக்கள் ஆலையை மூட வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100வது நாளில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனை அடுத்து போலீசார் கலகக்காரர்களை அடக்க துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடியில் பதற்றத்தினை தணிக்க பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு ஆனது இயல்பு நிலை திரும்பியதனை தொடர்ந்து முடிவுக்கு வந்தது.

அதன்பின்னர், துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜு சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சென்று அவர்களின் உடல்நலம் பற்றி கேட்டறிந்து ஆறுதல் கூறினார். அவர்களுடன் அமைச்சர் ஜெயகுமாரும் உடன் சென்றார்.

இந்த நிலையில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடிக்கு செல்கிறார்.

இதற்காக அவர் இன்று காலை 8 மணிக்கு சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டார். அரசியல் பிரவேச அறிவிப்பிற்கு பின் முதன்முறையாக அவர் பொதுமக்கள் தொடர்புடைய விவகாரங்களுக்காக களம் இறங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com