நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்

பிடிவாரண்டு உத்தரவில் கைதான: நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்
நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்
Published on

சென்னை,

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மீரா மிதுனை கைது செய்தனர்.

அதன்பின்பு அவர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.

வழக்கு விசாரணைக்கு மீரா மிதுன் கோர்ட்டில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் ஜாமீன் கோரி மீரா மிதுன் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர் ஆஜராகி வாதாடினார். முடிவில், மீராமிதுனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், கோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாரம் தோறும் திங்கள், வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com