ஒரே ஆண்டில் 2-வது முறையாக நிரம்பி வழியும் அடவிநயினார் அணை


ஒரே ஆண்டில் 2-வது முறையாக நிரம்பி வழியும் அடவிநயினார் அணை
x

அடவிநயினார் அணை நிரம்பி உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தென்காசி


தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியையொட்டி மேக்கரை பகுதியில் அடவிநயினார் கோவில் அணை உள்ளது. 132.22 அடி உயரம் கொண்ட இந்த அணை கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவமழையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழிந்தது.

தொடர்ந்து அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு மற்றும் கடும் வெயில் காரணமாக நீர்மட்டம் குறைந்தது.

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை மீண்டும் பரவலாக பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் இரவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை கொட்டியது. இதனால் அடவிநயினார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று ஒரே நாளில் சுமார் 3 அடி உயர்ந்து முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது.

அணைக்கு வினாடிக்கு வரும் 100 கன அடி தண்ணீரும் அப்படியே திறந்து விடப்படுகிறது. இதனால் அனுமன் நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே ஆற்றின் கரையோரம் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும், ஆற்றில் இறங்கி குளிக்கக்கூடாது எனவும் பொதுப்பணித்துறை சார்பில் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையால் ஒரே ஆண்டில் அடவிநயினார் அணை இருமுறை நிரம்பி வழிந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

1 More update

Next Story