

சேலம்,
தமிழகத்தில் கொரோனாவின் 3-வது அலையை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக சேலம் மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட கலெக்ட கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சேலம் மாநகர எல்லைக்குள் செயல்படும் அனைத்து மால்கள், ஜவுளி கடைகள், நகைக் கடைகள், வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட்கள் ஆகியவை மாலை 6.00 மணிவரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும், மேற்படி வணிக நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமை செயல்பட அனுமதியில்லை.
செவ்வாய்பேட்டை மெயின்ரோடு, நாவலர் நெடுஞ்செழியன் சாலை, லாங்லி நோடு, பால் மார்க்கெட், லீபஜார், வீரபாண்டியார் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மாலை 6.00 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
வ.உ.சி மார்க்கெட், சின்னகடை வீதி ஆகிய இடங்களில் செயல்படும் பூ, பழம் மற்றும் காய்கறி கடைகள் மாலை 6.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
துணிக்கடைகள், நகைக்கடைகள், மால்கள், வணிக வளாகங்கள் போன்ற அனைத்து வணிக நிறுவனங்களிலும் குளிர்சாதன வசதி பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.
வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற நாட்களில் ஏற்காட்டிற்கு பயணிக்கும் பயணிகள் கோவிட்-19 கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்தி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
கொங்கணாபுரம் வாரச்சந்தை, வீரகனூர் வாரச்சந்தை,வரும் 23ம் தேதி வரை செயல்பட தடை விதிக்கப்படுகிறது என்றும் மேட்டூர் அணை பூங்கா 23ம் தேதி வரை பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.
இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்த வெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என்று கலெக்டர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.