

சென்னை
நடிகர் ரஜினிகாந்த் பற்றி அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனாவுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என மத்திய இணை மந்திரி எல். முருகன் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜாதி, மதம், மொழியை கடந்து தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் அறிந்த நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். அனைத்த தரப்பு மக்கள் மீது தீராத அன்பு கொண்ட அவர், தவறை சுட்டிக்காட்ட என்றுமே தயங்கியதில்லை. தவறு செய்பவர்களை தட்டிக்கேட்பதும், மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை பயமின்றி எதிர்த்து நிற்பதையும் வழக்கமாக கொண்டவர்.
அரசியலுக்கு வந்து அவர் மக்கள் தொண்டாற்ற வேண்டும் என அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று ரஜினிகாந்த, அரசியல் பாதையில் பயணம் செய்ய முடிவு செய்து பிறகு உடல்நல பிரச்சனையால் முடிவை கைவிட்டார்.
அவரை பற்றியும் அவரது அரசியல் பயண முடிவு குறித்தும் த.வெ.க. மூத்த நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா வாய்க்கு வந்தபடி பேசுவது கடும் கண்டனத்துக்குரியது. சொந்த அரசியலுக்காக தமிழக மக்களின் மனங்களை கொள்ளை கொண்ட மாபெரும் நடிகர் குறித்து ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆதவ் அர்ஜுனாவுக்கு எனது கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.
ரஜினிகாந்திடம் ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.