ஆதவ் அர்ஜுனாவின் பதிவு உச்சக்கட்ட பொறுப்பின்மை - கனிமொழி எம்பி

அமைதியை ஏற்படுத்துவதற்கு மாறாக இன்னும் பிரச்சினையை தூண்டுவது போல பேசுகிறார்கள் என்று கனிமொழி கூறினார்.
சென்னை,
திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“கட்சித் தலைவர், நிர்வாகிகள் என ஒருவர் கூட இன்னும் கரூர் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. சம்பவம் நடந்த நாளன்று மக்களை சந்தித்து ஒரு ஆறுதல் கூட சொல்லாமல் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். ஆனால் தமிழக அரசும், திமுக நிர்வாகிகளும் தான் சம்பவம் நடந்ததில் இருந்து இப்போது வரை மக்களுக்கு ஆறுதலாக நிற்கிறார்கள். இது குறை சொல்லும் நேரம் கிடையாது. முதல்வர் ஸ்டாலின் கூட இப்போதும் மக்களுக்கு துணையாகவே பேசி வருகிறார். தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் பதிவு உச்சக்கட்ட பொறுப்பின்மையை காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.
முன்னதாக தனது எக்ஸ் (X) பதிவில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, சில நிமிடங்களில் அந்த பதிவை நீக்கியிருந்தார். எக்ஸ் பதிவில் ஆதவ் அர்ஜுனா பதிவிட்டதாவது:
“சாலையில் நடந்து சென்றாலே தடியடி... சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது... இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறிப்போனால், மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சிதான் ஒரே வழி. இளைஞர்களும், ஜென் Z தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ, அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும், அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!” எனப் பதிவிட்டிருந்தார்.






