பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை: தமிழக அரசு உறுதிப்படுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

இந்த ஆண்டாவது பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுவதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை: தமிழக அரசு உறுதிப்படுத்த மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
Published on

சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஏழை - எளிய, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு எதிரான நீட் தேர்வு முற்றாக கைவிடப்படவேண்டும் என்பதிலும், தலைவர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் பின்பற்றியவாறு, பிளஸ்-2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையிலும் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.

தி.மு.க.வின் ஆதி அடிப்படையான இந்த கருத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. பரவலான கருத்தொற்றுமையின் அடிப்படையில், தமிழக சட்டப்பேரவையில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக்கோரி இரு சட்ட மசோதாக்கள் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட மசோதாக்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெறுவதில், பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று சொல்லிக்கொண்டே, அ.தி.மு.க. அரசு பரிதாபமாக படுதோல்வி அடைந்துவிட்டது. மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய சட்டங்களை, சுயநல நோக்கில், நாடாளுமன்றத்தில் ஆதரித்தபோதும்கூட, அ.தி.மு.க. அரசு நீட் சட்ட மசோதாக்களுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து ஒப்புதல் பெறுவதில் கோட்டை விட்டுவிட்டு, தமிழக மாணவர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை இழைத்துவிட்டது.

சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளை மத்திய அரசுக்கு அனுப்பி, 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அந்த சட்ட மசோதாக்களின் தற்போதைய கதி என்ன என்பது குறித்து இப்போதாவது தமிழக மக்களுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளிக்கவேண்டும்.

கொரோனா பெருந்தொற்று மக்களை வாட்டி வதைத்து வரும் தருணத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிக்கை விடுத்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால், கொள்கை அளவில் நீட் தேர்வை ஏற்றுக்கொள்ளாத தமிழ்நாடு அரசோ, முதல்-அமைச்சரோ இந்த தலையாய பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் பாராமுகமாக இருந்து வருவதில் இருந்தே அவர்களுடைய உள்நோக்கம் ஊருக்கு தெரிந்துவிட்டது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முனைப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை எந்த அடிப்படையில் நடக்கப்போகிறது என்பதில் நிலவும் குழப்பம் காரணமாக, லட்சக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும் குழப்பத்திலும், கொந்தளிப்பிலும் உள்ளனர். புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டி, அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கான அனுமதி தொடங்கும் என்று சொல்லி, பிரச்சினையைத் திசை திருப்ப முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முயற்சி, தமிழக மாணவ - மாணவியரிடம் நிச்சயம் பலிக்காது.

தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்டி, நீட் தேர்வை நிராகரித்து, பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என பிரகடனப்படுத்தி, நமது கோரிக்கையின் நியாயத்தை மத்திய அரசு ஏற்கச்செய்து, உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் அழுத்தந்திருத்தமாக வலியுறுத்துகிறேன்.

நீட் சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் பெறுவதில் அடைந்த படுதோல்வியை மூடிமறைக்க, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஜூலை மாதம் தமிழக அமைச்சரவை கூடி நிறைவேற்றிய தீர்மானத்தின் நிலை என்ன என்பது இதுவரை புதிராகவே இருக்கிறது. இதுகுறித்து அவசரச் சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று முதல்-அமைச்சர் நேற்று திடீரென அறிவித்துள்ளார். ஒரு மாதத்திற்கும் மேலாக அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது மேல் நடவடிக்கை எடுக்காமல் குறட்டை விட்டது ஏன்?

இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அமைவதை உறுதிப்படுத்த வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com