அ.தி.மு.க., கொடி, சின்னம் வழக்கு : இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுப்பு

அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.s
அ.தி.மு.க., கொடி, சின்னம் வழக்கு : இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுப்பு
Published on

சென்னை,

 அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஒ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து கடந்த 18ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மேல் முறையீட்டு மனுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? இல்லையா? என்பது குறித்து நிலுவையில் உள்ள மூல வழக்கில் தான் முடிவு செய்ய முடியும் என ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

42 ஆண்டுகளாக அதிமுகவின் அடிப்படை தொண்டர், முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த தனக்கு, கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்தது ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.

கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்களோ அல்லது கட்சியின் தொண்டர்களோ புகார் அளிக்காத நிலையில், எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்ததாக மேல் முறையீட்டு மனுவில் கூறியுள்ளார்.

மேலும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை எனவும் இரண்டு விதமான கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர் செல்வம் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி, இந்த வழக்கு கடந்த வந்து நிகழ்வுகளை கூறினார். மேலும், இரட்டை இலை சின்னத்தை தனது தலைமையில் இருந்த மதுசூதனனுக்கே தேர்தல் ஆணையம் வழங்கியதாகவும் ஓ.பன்னீர் செல்வம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுக தடை விதிக்க கூடாது என கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையத்தை அணுக தடையில்லை என தெரிவித்ததோடு இந்த வழக்கில் தற்போது எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறிய நீதிபதிகள் இறுதி விசாரணைக்காக வழக்கை ஜூன் மாதம் 10 -ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com