வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் - வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் - வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள புதிய இருளஞ்சேரியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் மோகன் (வயது 23). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராமன் இறந்தார்.

இந்த நிலையில் 10-ம் வகுப்பு வரை படித்த மோகன் கூலி வேலைக்கு சென்று வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களாக மோகன் சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது தாய் சித்ரா ஏன் இவ்வாறு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாய் என கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனையடைந்த மோகன் கூவம் அருகே உள்ள மாந்தோப்பிற்கு சென்று அங்குள்ள மாமரத்தில் புடவையல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாயார் சித்ரா மப்பேடு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து இறந்த மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அவரது சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர் பேட்டை அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் அமாவாசை (வயது 43). இவர் செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரீட்டா (38). இவருக்கு 6 மகள்கள் உள்ளனர். இவர்களில் 3 பேருக்கு திருமணமான நிலையில் மேலும் மூன்று மகள்களுக்கு திருமணம் செய்ய வேண்டியது உள்ளது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான அமாவாசை நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து படுத்து தூங்கினார். மறுநாள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர் எழுந்து கொள்ளாததால் உறவினர்கள் அவரை தட்டி எழுப்பினார்கள். ஆனால் அவர் தூக்கத்திலேயே இறந்து விட்டது தெரிய வந்தது. இது குறித்து அமாவாசையின் மருமகன் சரவணன் (28) பொதட்டூர் பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அமாவாசையின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com