3 மாதங்களுக்கு பிறகு வங்கிக்கடன் தவணைத் தொகையை வட்டியின்றி செலுத்தலாம்

வங்கிக்கடன் தவணைத் தொகையை 3 மாத கால அவகாசத்திற்கு பின்பு வட்டி இல்லாமல் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3 மாதங்களுக்கு பிறகு வங்கிக்கடன் தவணைத் தொகையை வட்டியின்றி செலுத்தலாம்
Published on

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் இந்தியன் வங்கியின் நடமாடும் ஏ.டி.எம் சேவையை நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா பரவலை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமலும், அத்தியாவசிய தேவைகளுக்காக ஏ.டி.எம். சென்று பணம் எடுக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு இந்தியன் வங்கி சார்பில் நடமாடும் ஏ.டி.எம். சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே செல்லும் இந்த நடமாடும் ஏ.டி.எம். சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி பணத்தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது போல் பொதுமக்கள் தங்கள் கடனுக்கான தவணைத் தொகையை தற்போது கட்டத் தேவையில்லை. அதற்காக கொடுக்கப்பட்டுள்ள 3 மாத கால அவகாசத்திற்கு பின்பு அதை செலுத்தலாம்.

இதுகுறித்து அந்தந்த வங்கிகளின் இணையதளம் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். அனைத்து வங்கிகளுக்கும் தற்போது அரசு அறிவித்துள்ள நடைமுறைகள் பொருந்தும். தள்ளி வைக்கப்படும் மாத தவணைகளுக்கான வட்டி மற்றும் இதர பிடித்தம் இருக்காது.

மக்களுக்கு அரசு அளித்து வரும் ஓய்வூதியம் மற்றும் உதவித்தொகை இதர அனைத்து சலுகைகளும் அவரவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அதை பெறுவதற்கு இந்த நடமாடும் ஏ.டி.எம். வாகனம் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com