

தாயில்பட்டி
விஜயகரிசல்குளத்தில் நடந்து வரும் இரண்டாம்கட்ட அகழாய்வில் அகல்விளக்கு மற்றும் சுடுமண்ணால் ஆன மூடி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அகழாய்வு
வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில் தொடர்ந்து ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 16 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு அதில் வணிக முத்திரை, தங்கத் தாலி, யானை தந்ததால் செய்யப்பட்ட ஆபரணம், சங்கு வளையல்கள், புகைபிடிப்பான் கருவிகள், பாசிமணிகள், மண்பாண்ட பொருட்கள் கிடைத்துள்ளன.
அகல்விளக்கு
நேற்று கூடுதலாக இரண்டு புதிய அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டன. தோண்டபட்ட குழியில் அகல் விளக்கு, மற்றும் சுடுமண்ணால் ஆன மூடி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.
இம்மாதத்துடன் 2-ம் கட்ட அகழாய்வு நிறைவு பெற இருப்பதால் இதுவரை கிடைத்த பொருட்களை ஆவணப்படுத்தும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்கள் வைக்கப்பட்ட கண்காட்சியினை தொடர்ந்து ஏராளமான பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், பொதுமக்கள், தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றனர்.