

சென்னை,
தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளின் சார்பில் குறைந்த வட்டியில் பொது நகைக்கடன், விவசாய நகைக்கடன்கள் வழங்கப்பட்டு வந்தன. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளின் சார்பில் வழங்கப்பட்டு வந்த நகை கடன்கள் ஆதரவு அளித்தது.
இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் நகை கடன்களை மறு உத்தரவு வரும் வரையிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு கடந்த ஜூலை மாதம் மத்தியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரங்கள் கூட்டுறவுத்துறை கூடுதல் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட இணைப்பதிவாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
கொரோனா பேரிடர் காலத்தில் விவசாயிகள், வியாபாரிகள், சிறு தொழில் முனைவோர் உள்ளிட்ட ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்த நிலையில், அவர்கள் நகை கடன்கள் மூலம் ஓரளவு தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். இதையும் பறிக்கும் வகையில் நகை கடன்கள் முன்னறிவிப்பு இன்றி நிறுத்தப்பட்டது அவர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டியில் வழங்கப்படும் நகை கடன்கள் நிறுத்தி வைக்கும் பட்சத்தில் தனியார் அடகு கடைகள், கந்துவட்டிக்கு கொடுப்பவர்களிடம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சிக்கி தவிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படும் சூழல் உருவானது.
இந்நிலையில், பருவமழை தொடங்கி விட்டதால் விவசாய கடன்களை உடனடியாக வழங்க ஏதுவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. விவசாய கடன்களை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலமே பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதுடன், கூட்டுறவு சங்க பதிவாளரின் உத்தரவை வருகிற நவம்பர் 1ந்தேதி வரை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டுள்ளது.