அரசு பள்ளிகளில் 6-12-ம் வகுப்பு வரை ஏ.ஐ., காலநிலை அறிவியல் பாடம்: முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

முதல்-அமைச்சர் விஜய் கடந்த ஒரு வார காலமாக தினமும் ஒவ்வொரு துறையாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அரசு பள்ளிகளில் 6-12-ம் வகுப்பு வரை  ஏ.ஐ., காலநிலை அறிவியல் பாடம்: முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை
Published on

சென்னை,

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவு, காலநிலை அறிவியல் பாடங்களை கொண்டு வருவது குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் கடந்த ஒரு வார காலமாக தினமும் ஒவ்வொரு துறையாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், நிதித்துறை செயலாளர் சித்திக், பள்ளிக்கல்வித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் பங்கேற்றனர்.

செயற்கை நுண்ணறிவு பாடம்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு கட்டாயம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ள நிலையில் தமிழகத்தில் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் தகுதித்தேர்வு எழுதாமல் பணியில் உள்ள ஆசிரியர்கள் தகவல்களையும் முதல்-அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலை அறிவியல் பாடங்களை கொண்டு வருவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பள்ளிகளில் நவீன வகுப்பறைகள்

2031-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் அனைத்து பள்ளி நவீன வகுப்பறைகளும் 'ஸ்மார்ட் கிளாஸ்' அறைகளாக மாற்றப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அரசு பள்ளி ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்தும் விதமாக தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்கல்வியில் சிறந்து விளங்கும் சிங்கப்பூர் மற்றும் பின்லாந்து நாடுகளில் பயிற்சி பெறும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்தும், அரசு பள்ளி ஆசிரியர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை திறன் பட கற்றுக்கொள்ள ஏதுவாக செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கல்வி திறன் மேம்படுத்தும் திட்டம் பற்றி ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது. பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக என்னென்ன புதிய அறிவிப்புகளை இடம்பெறச் செய்யலாம் என்பது பற்றியும் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com