அதிமுக ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதம் - முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நடந்த காரசார விவாதத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆலோசனை கூட்டத்தில் காரசார விவாதம் - முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை
Published on

சென்னை,

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதற்கிடையில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஓ.பன்னீர்செல்வம் வந்த போது, ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என முழங்கிய தொண்டர்கள், எடப்பாடி பழனிசாமி வரும்போது, நிரந்தர முதல்வர் எடப்பாடியார் என்று கோஷம் எழுப்பினர். முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட இருந்த நிலையில் தொண்டர்களின் இத்தகைய இருவேறான கோஷத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நியமனம் குறித்து காரசார விவாதம் நடந்தது. மேலும் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் செயல்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைப்பதில் முடிவு எட்டப்படவில்லை என்றும் முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com